![]() |
பைசு ஹள்ளி ஏரி N 12.2135, E 78.1884 |
தருமபுரி மாவட்டம்,
காரிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்டது பைசு ஹள்ளி கிராமம். இங்குள்ள ஏரி கிராமத்தின் பெயராலேயே வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் பொதுப்பணித்துறையின்
கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த ஏரியின்
நீரைக் கொண்டு பைசு ஹள்ளி, மாட்லாம்பட்டி, இண்டமங்கலம், கன்னிப்பட்டி,
கெங்குசெட்டிப்பட்டி, நல்லம்பட்டி,
பிளப்பங்கொட்டாய் முதலான 50 கிராமங்களில் உள்ள நிலங்கள் பாசன வசதிபெற்று
வருகின்றன.
இந்த ஏரிக்கு
புலிகரை ஏரியின் வடிகால் பகுதியிலிருந்து காலப்பன ஹள்ளி வழியாக தண்ணீர் வரவேண்டும். 2005 ஆம் ஆண்டு பெய்த
கனமழைக்கு பிறகு புலிகரை ஏரியே நிரம்பாமல் வறண்ட நிலையில் இருப்பதால்,
பைசு ஹள்ளி ஏரிக்கும் நீர் வரத்தே இல்லாமல் போனது. இதன் வரத்துக் கால்வாய்
சிதிலமடைந்தும், ஆக்கிரமிப்புக்கும் உள்ளானதால், சுற்றுவட்டார
கிராம விவசாயக் கிணறுகளுக்கு நீர் ஆதாரமாக விளங்கிய இந்த ஏரியும் வறண்டு போனது. இதனால் பாசனக்
கிணறுகளில் நீர் இன்றி வேளாண் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. ஏரியில்
சீமைக்கருவேல மரங்களும் இதர செடிகொடிகளும் வளர்ந்து காணப்படுகிறது.
போதிய பராமரிப்பு
இன்றி இந்த ஏரி உள்ளதால் ஏரி தற்சமயம் குப்பைக் கிடங்காக மாறிவருகிறது. மாட்லாம்பட்டி கிராமத்தின் கழிவுகள்,
மருத்துவமனைக் கழிவுகள் இங்கு கொட்டப்பட்டு தீயிட்டு கொளுத்தப்படுகிறது. இதனால் ஏரி மாசடைந்து வருகிறது. ஏரியின் கரையோரப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகளாகிக்
கொண்டிருக்கின்றன.
அரசு முயற்சி
எடுத்து, வரத்துக் கால்வாயையும், ஏரியின் எல்லைகளையும்
பதிவேட்டின்படி சரிபார்த்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன் ஏரியிலுள்ள மரம்,செடிகொடிகளை
அகற்றி, ஏரியை தூர்வாரி, ஆழப்படுத்தி
வைத்தால் மட்டுமே எதிர்காலத்தில் இந்த ஏரியில் தண்ணீரைப் பார்க்கமுடியும். விவசாயம்
செய்யமுடியும். இல்லாவிடில் இந்த ஏரி மறைந்து
ஒரு ஊரே உருவாகிவிடும். விவசாயிகள் ஊரை காலிசெய்துவிட்டு பஞ்சம் பிழைக்கப் போகவேண்டியதுதான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக