![]() |
பி.அக்ரஹாரம் முனியப்பன் கோயில் |
தருமபுரி நகரிலிருந்து பென்னாகரம் செல்லும் சாலையில் 25
கி.மீ. தொலைவில் உள்ளது பிலியனூர் அக்ரஹாரம் எனும் ஒரு சிறிய கிராமம். நல்லம்பள்ளி
ஒன்றியத்திற்குட்பட்ட இந்த ஊரின் எல்லைப்புறத்தில் சுமார் 80 ஏக்கர் பரப்பளவு
கொண்ட பி.அக்ரஹாரம் ஏரிக்கரையில் கிழக்குதிசை நோக்கி அமைந்துள்ளது முனியப்பன்
கோயில். (அநேகமாக தமிழத்தின் அனைத்துப்பகுதிகளிலும் சிறுதெய்வ கோயில்களில் ஆண்
தெய்வங்கள் கிழக்குதிசை நோக்கியே அமைக்கப்பட்டிருக்கும்)
இங்கும் முனியப்பன்
கோயில் உருவான விதம் பற்றிய செவிவழிக் கதையொன்று சொல்லப்படுகிறது. இங்குள்ள
மக்கள் அருகாமையிலுள்ள கொம்பரசன் கோட்டை என்ற மலைப்பகுதியில் உள்ள காட்டில் மூங்கில்
வெட்டியெடுத்து வரச்சென்றதாகவும் அப்போது ஒருவர் தனியே மூங்கில்
வெட்டிக்கொண்டிருந்தபோது, உடல்நலம் பாதித்து மயங்கி
விழுந்துவிட்டதாகவும் அப்போது ஒருவர் குதிரையில் வந்து விழுந்துகிடந்த நபரை தூக்கி
குதிரையில் வைத்து ஊருக்குள் கொண்டுவந்து இறக்கிவிட்டுச் சென்றதாகவும், ஊருக்குள் வந்தவுடன் உடல்நலம்
பாதிக்கப்பட்டிருந்த நபர் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டதாகவும், இந்த செய்தியை அவர் ஊர் மக்களிடம்
பகிர்ந்துகொள்ள, அவரை ஊருக்குள்
கொண்டுவந்து விட்டது ஊர்க்காவல் தெய்வமான முனியப்பன்தான் என்றும் அந்த மலைப்பகுதிக்குச்
சென்று முனியப்பனை வழிபாடு செய்து வந்தனர்.
காலப்போக்கில் முனியப்பனுக்கு கோயில் எழுப்பி
கொண்டாடவேண்டும் என்று தீர்மானித்து கொம்பரசன் மலையில் கிடைத்த ஒரு வேல் மற்றும்
பூசைமணியை எடுத்து வந்து ஊர் எல்லையில் ஏரிக்கரையில் கோயில் எழுப்பி வழிபடத்
தொடங்கினர். இப்போதுள்ள கோயில் சுமார் 100
ஆண்டுகளுக்கு முன் சுதை வடிவ முனியப்பன், ஒரு கால் மடக்கி ஒரு கால் தொங்கவிட்டு வலது கையில் பெரிய கத்தியுடனும் இடது கை
அவரது தொடையிலும் வைத்து அமர்ந்த நிலையில் அவரது வலது மற்றும் இடது பக்கங்களில் 2 காவலர்கள்
குதிரைகளுடன் நின்ற நிலையிலும் முனியப்பனின் காலுக்கு அடியில் ஒரு புற்றும் அதில் பாம்பு
ஒன்று படமெடுத்த நிலையிலும் அருகில் ஒருவர் மகுடி வாசிப்பது போலவுமான சிலைகள் எழுப்பப்பட்டுள்ளன.
சுமார் 300 சதுர அடி பரப்பளவில் 6 அடி உயரம் கொண்ட மேடையில் இந்த சிலைகள்
அமைக்கப்பட்டுள்ளன. இந்த முனியப்ப சாமி சிலைகளுக்கு கோயில் கோபுரமோ, கூரையோ கிடையாது. திறந்த வெளியில்
உள்ளது. (பெரும்பாலும் நாட்டுப்புற தெய்வக்
கோயில்கள் திறந்த வெளியிலேயே எழுப்படுகின்றன.) ஆரம்பத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை
மார்கழி மாத வளர்பிறை நாட்களில் வரும் செவ்வாய்க்கிழமை அன்று முனியப்பனுக்கு விழா
எடுத்து கொண்டாட ஊர்மக்கள் ஊர்க்கவுண்டர் முன்னிலையில் முடிவு செய்தனர். அதன்படி
கார்த்திகை மாதத்தில் ஊர்மக்கள் ஒன்றுகூடி விழா எடுப்பது குறித்து முடிவு
செய்கின்றனர். தலைக்கட்டு வரி வசூல் செய்யப்பட்டு விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு
வந்தன.
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்று நடத்தப்பட்ட திருவிழா, தற்போது ஒவ்வொரு ஆண்டும்
நடைபெறுகின்றன.
திருவிழா:
மார்கழி மாதம் வளர்பிறை நாட்களில் வரும் செவ்வாய் கிழமையை
திருவிழா நடத்த அருள்வாக்கு கேட்டு முடிவுசெய்யதவுடன், விழா நடைபெறும் நாட்களுக்கு முன்னதாக
இக்கிராம மக்கள் கையில் மஞ்சள் காப்பு கட்டி
விரதம் மேற்கொள்கின்றனர். திருவிழா நாளில் பறை, மேளதாளம் முழங்க ஊர்மக்கள்,
புதுப்பானை, புத்தரிசி, பூசை பொருட்கள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக கோயிலுக்கு
செல்வர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் ஆடு, கோழி ஆகியவைகளையும் உடன் கொண்டு செல்வர்.
தெற்கு -வடக்காக ஓர் அடுப்பும், கிழக்கு-மேற்காக ஓர் அடுப்பும் குழி எடுத்து
கோயில் தர்மகர்த்தாவால் அதில் பொங்கல்
வைக்கப்பட்டு சாமிக்குப் படைக்கப்படும். ஏனையோர் கோயிலைச் சுற்றி பொங்கல்
வைப்பார்கள். சாமிக்குக் கோழி, ஆடு,
பன்றிகள் பலியிடுவது நடக்கும். அவைகளின் இரத்தத்தை புதுப்பானையில் பிடித்து,
சாமிக்குப் படையலிட்ட சமைக்கப்பட்ட கறி மற்றும் பொங்கல், பூசைபொருட்கள்
ஆகியவைகளைக் கலந்து பலி சோறு செய்வார் தர்மகர்த்தா. சாமிக்கு முப்பூசைகள்
நடக்கும். முதல் பூசை வன்னியர் சமூக மக்களுக்கும், இரண்டாவது பூசை கன்னிமார்
சாமிக்கும் மூன்றாவது பூசை ஏனைய சமூகத்தினருக்காகவும் நடத்தப்படும். பின்னர்
பலிசோற்றை கிழக்குதிசை தவிர அனைத்து திசைகளிலும் பூசாரி பொலியோபொலி என்று
உரத்தகுரலில் சொல்லியபடி வாரி இறைப்பார். பின்னர் புதுப்பானையை உடைத்து விட்டு
மீண்டும் தேங்காய் உடைத்து மறுபூசை செய்வார். சாமிக்கு நேர்த்திக்கடனாக விரதம்
இருப்போர் மஞ்சள் ஆடை அணிந்து அலகுக்குத்தி
வந்து வேண்டுதல்களை நிறைவேற்றிச் செல்வர்..
மார்கழி மாதம் வளர்பிறை செவ்வாய்க்கிழமை நடைபெறும் திருவிழா
மட்டுமின்றி ஆடிபெருக்கு, தைப்பொங்கல்
போன்ற பண்டிகை நாட்களிலும், பிரதி மாதம்
அமாவாசை தினங்களில் முனியப்பனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
பி.அக்ரஹாரம் முனியப்பனுக்கு நடைபெறும் திருவிழாவுக்கு நூற்றுக்கணக்கில் ஆடுகளும்,
ஆயிரக்கணக்கில் கோழிகளும் பலியிட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. தருமபுரி,
கிருஷ்ணகிரி மற்றும் பிற பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து இந்த
விழாவை சிறப்பித்துச் செல்கின்றனர். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தத்
திருவிழாவில், நூற்றுக்கணக்கான சிறு கடைகள் போடப்பட்டு வியாபாரம் நடக்கும். பிற
கேளிக்கைகள், வானவேடிக்கை முதலானவைகளும் அப்போது நடத்தப்படுகின்றன. (ஏனைய
பெருங்கோயில் தெய்வங்களுக்கு நடத்தப்படுவது போல தினமும் ஆறுகால பூசைகள் இன்ன பிற
விசேஷ பூசைகள் இங்கு நடத்தப்படுவதில்லை. பக்தர்களின் வசதிக்கும் விருப்பத்திற்கேற்ப
பூசைகள் நடத்தப் படுவதுண்டு.
இந்த கோயிலும் தமிழ அரசின் இந்து அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில்
வருகிறது
இது தவிர தருமபுரியில். தொப்பூர் பாலத்து முனியப்பன்,
இண்டூர் அருகே, பாப்பனேரி கரையிலுள்ள
முனியப்பன் சாமி கோயில், தருமபுரி ரயில்வே கேட் அருகே அமைந்துள்ள சக்தி முனியப்பன்
என எண்ணற்ற முனியப்பன் கோயில்கள் உள்ளன. இவைகளில் மிகவும் புகழ் பெற்ற கோயில்களாக
மேலே குறிப்பிட்ட இரண்டு கோயில்களைச் சொல்லலாம். தற்போது சில முனியப்ப சாமி
கோயில்கள், பெருந்தெய்வக் கோயில்கள் போல், மேல்நிலை ஆக்கம் செய்யப்பட்டு கோயில்
கோபுரங்கள் எழுப்பட்டும் மேலாதிக்க சாதி அர்ச்சகர்களைக் கொண்டு கும்பாபிஷேகங்களும்
நடத்தப்படுகின்றன. இவைகள் நாட்டுப்புறப் பண்பாட்டு மரபுகள் கொண்டதாகாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக