தென் பெண்ணையாறு “தக்ஷிண பினாகினி” என்று கர்நாடக மாநிலத்திலும் தமிழ் நாட்டில் “தென்
பெண்ணையாறு”, “பொண்ணையார்” என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தில உள்ள சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் சென்னகேசவ மலையின் தென்கிழக்கேயும், நந்தி மலை அல்லது நந்தி துர்க் எனும் தென் இந்தியாவின் பிரபலமான
மலைக்கோட்டைப் பகுதியின் வடமேற்கு திசையிலும் உருவாகி, சுமார் 85 கிலோமீட்டர் தொலைவு கடந்து கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவின் வடதிசை வழியே கர்நாடக-தமிழக மாநிலங்களின் எல்லைப்பகுதிக்கு
அருகே, மடிவாளம், பெல்லாந்தூர் மற்றும் வரட்டூர் ஏரிகளிலிருந்து எஞ்சிய தண்ணீரையும்
எடுத்துக்கொண்டு, தமிழ் நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஹோசூர் வட்டத்தில் பாகலூர் கிராமத்திற்கு மேற்கே சுமார்
4 கி.மீ. தொலைவில் தமிழக எல்லையில் கொடியாளம் ஏரியில் கலக்கிறது. இந்த ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதி 3687 சதுர கி. மீ. ஆகும்.
ஹோசூர் வட்டம், சேவகானப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சிற்றூர் கொடியாளம். இந்த கிராமத்தில்
உள்ள கொடியாளம் ஏரியினால் சுமார் 2000 ஏக்கர் நிலங்களும்,
இந்த ஏரியை அடுத்துள்ள தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கெலவரப்பள்ளி நீர்தேக்கத்தினால் சுமார் 9000 ஏக்கர்
நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. மேலும், ஹோசூர், கிருஷ்ணகிரியில் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் தொழிற்சாலைகளுக்குத்
தேவையான தண்ணீரும் கிடைத்துவருகின்றன. இதனை அடுத்துள்ள கிருஷ்ணகிரி
நீர்தேக்கத்தினால் (KRP Dam) சுமார் 20000 ஏக்கர் நிலங்கள்
பாசனவசதி பெறுகின்றன.நெடுங்கல் அணை மற்றும்
பாரூர் ஏரி (ஆங்கிலேயர்களால் வெட்டப்பட்டது) வழியாக அரசம்பட்டியைக் கடந்து
கே.ஈச்சம்பாடி நீர்த்தேக்கத்தின் வழியாக ஹனுமன்தீர்த்தம், தூவலைக் கடந்து திருவண்ணாமலை மாவட்டம் நீப்பத்துறைக்குச் சென்று
அங்கிருந்து சாத்தனூர் அணைக்கட்டு, மூங்கில்துறைப்பட்டு, விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அணையை கடந்து
ஓடி, கடலூர் நகரிலிருந்து சுமார் 9 கி,மீ.
தொலைவில் உள்ள உப்பளவாடிக்கு அருகே வங்கக்கடலில் கலக்கிறது.
தென் பெண்ணையாறு கர்நாடகத்தில் உருவாகி தென் திசையில் பயணித்து பின் தமிழ் நாட்டில் கிழக்கு நோக்கித் திரும்பி, சுமார் 331.2 கி.மீ. தூரம் பயணித்து வங்கக் கடலை சென்றடைகின்றது.
ஆண்டின் பெரும்பாலான காலங்களில்
இந்த ஆறு வறண்டே இருக்கும். இதன் நீர்ப்பிடிப் பகுதிகளில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு
பருவமழைக் காலங்களில் பொழியும் மழையின் அளவைப் பொறுத்தே இந்த ஆற்றில் நீர்
இருக்கும். ஆனாலும் இந்த ஆற்றின் நீரோட்டத்தினால் ஆற்றுப்படுகை
முழுவதிலும் வழி நெடுகிலும் உள்ள அணைக்கட்டுகள், குளங்கள், கிணறுகள் மற்றும் ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்துவிடும்.
இந்த ஆற்றின் மூலம் தமிழ் நாட்டின் 5
மாவட்டங்களில் (கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர்) சுமார் 36000
ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெற்று சிறப்பான விவசாயம்
நடைபெற்று வருகிறது. மேலும் வழிநெடுகிலும் நூற்றுக்கணக்கான ஊர்களுக்கு குடிநீர் ஆதரமாகவும் விளங்கிவருகிறது. தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தென் பெண்ணையாற்றின் உப நதிகளாக சின்னார்
(மார்கண்ட நதி), வாணியாறு, பாம்பாறு ஆகிய நதிகள் உள்ளது. சின்னார் மைசூர் பீடபூமிப் பகுதியில்
உள்ள வனப்பகுதியில் உருவாகி தீர்த்தம், வேப்பணபள்ளி வழியாகப் பாய்ந்து தென் பெண்ணையாற்றில்
கலக்கிறது. வாணியாறு சேலம் மாவட்டத்தில் சேர்வராயன் மலைப்பகுதியில்
உருவாகி தருமபுரி அரூர் வட்டம், பூங்காரம்பட்டி காப்புக்காட்டில் தென் பெண்ணையாற்றுடன் இணைகிறது. பாம்பாறு
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டம்,
ஜவ்வாது மலையில் ஆலங்காயத்தில் உற்பத்தியாகி திருப்பத்தூரில் தெற்கு நோக்கிச்
சென்று பின் ஊத்தங்கரை வழியாக ஓடி தென் பெண்ணையாற்றில் இணைகிறது.
அகன்றும் குறுகியும் ஓடும் தென் பெண்ணையாற்றின் மணல்வெளிப் பரப்பை பார்க்கும்போது ஒரு காலத்தில் ஆண்டுதோறும் தண்ணீர் பரவலாக ஓடிக்கொண்டிருந்ததை அறியலாம்.
இதற்கு இந்த ஆற்றின் கரை நெடுகிலுமுள்ள சைவ வைணவத் திருக்கோவில்களும் ஆற்றின் மணல்வெளிப் பரப்புமே இன்றும் சாட்சியாக உள்ளன. தமிழ்
நாட்டில் பக்தி இலக்கியங்களில் குறிப்பாக தேவாரம், திருவாசகம் போன்றவற்றில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரப் பகுதிகளில் உள்ள கோயில்களில் குடிக்கொண்டுள்ள
கடவுள்களைப் பற்றிப் பாடும்போது புலவர்கள் இந்த ஆற்றின்
சிறப்பையும் வர்ணித்துப் பாடியுள்ளனர்.
இந்த ஆறு கரைபுரண்டு ஓடுவதைக் கண்ட
ஆங்கிலேயர்கள் இதன் ஓட்டத்தை தடுத்து நிறுத்தி அந்தந்தப் பகுதிகளில் விவசாய
உற்பத்தியைப் பெருக்கத் தடுப்பு அணைகள் கட்டி இருப்பதை தமிழக வரலாற்றை
திரும்பிப் பார்த்தோமேயனால் கண்டுகொள்ளலாம். (நெடுங்கல் அணை மற்றும் திருக்கோயிலூர் தடுப்பு அணை).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக